புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி சீரமைக்க வலியுறுத்தல்
மதுரையில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மதுரையில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
புழுதி பறக்கும் சாலை
மதுரை மாநகரம் இரவு, பகல் என எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒரு நகரம். உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் இருப்பதால் ஏராளமானவர்கள் மதுரைக்கு அடிக்கடி வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு குடிநீர் குழாய் அமைத்தல், சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக நடப்பதால் சாலைகளில் குழிகள் தோண்டப்படுகிறது. பணிகள் முடிந்த பின்னரும் சாலைகள் சீரமைக்கப்படாமலேயே காணப்படுகிறது.
இதன் காரணமாக பல இடங்களில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டும் வருகிறது. மேலும் குண்டும், குழியுமான சாலைகளால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல வாகனங்களில் செல்லும் போதும் புழுதியும் அதிக அளவில் பறக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடர்த்தியாக புழுதி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், மதுரையில் முக்கிய சாலைகள் தற்போது புழுதி சாலைகளாக மாறி இருக்கிறது. சாலையின் ஓரத்தில் உள்ள மண் குவியல்களை அவ்வப்போது அள்ளினாலும் தூசி சாலையாகவே இன்னும் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையை எப்போது தான் அதிகாரிகள் சீரமைப்பார்கள் என்றும் புலம்பும் நிலை உள்ளது.
மேலும் புழுதியில் வாகனங்களை ஓட்டுவதால் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகின்றனர். இதேபோல் அந்த வழியாக தொடர்ச்சியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சுவாச கோளாறு ஏற்படும் அபாயமும் உள்ளது. அந்த சாலையோரம் வசிக்கும் பொதுமக்களும் சிரமப்படுகிறாா்கள். எனவே புழுதி பறப்பதை தடுப்பதற்கு சாலைகளை விரைந்து சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றனர்.