வேதாரண்யத்தில் கிளைசிறை அமைக்க வேண்டும்


வேதாரண்யத்தில் கிளைசிறை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 14 Feb 2023 10:11 AM GMT)

வேதாரண்யத்தில் கிளை சிறை அமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கத்தினர் கோாிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்

வேதாரண்யத்தில் கிளை சிறை அமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கத்தினர் கோாிக்கை விடுத்துள்ளனர்.

5 போலீஸ் நிலையங்கள்

வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம் தலைஞாயிறு, வேட்டைக்காரன் இருப்பு ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன. வேதாரண்யம் ஒன்றியத்தில் 60 ஊராட்சிகள் உள்ளன. வேதாரண்யம் தாலுகாவாக 1980-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கோட்டாட்சியர் அலுவலகம் கடந்த 2000-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு உள்ளது. வேதாரண்யத்தில் கடந்த 2006 -ம் ஆண்டு முதல் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கி இயங்கி வருகிறது.

தற்போது முழு நேர நீதிமன்றமாக இயங்கி வருகிறது. நாகப்பட்டினம் தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட 4 இடங்களில் கிளை சிறைகள் உள்ளன. வேதாரண்யத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் கிளைசிறை இதுவரை இல்லை.

நாகை மாவட்டத்தின் தென்கோடி பகுதியான வேதாரண்யத்தில் கிளைச் சிறைச்சாலை இல்லாததால் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்துக்கோ அல்லது 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தரங்கம்பாடி சிறைக்கோ அல்லது 100 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறை துறை சிறைக்கோ குற்றவாளிகளை கொண்டு செல்லவேண்டி உள்ளது.

வேதாரண்யத்தில் கிளை சிறை

வேதாரண்யம் சரகத்தில் 5 போலீஸ் நிலையங்கள் இருந்தும் குற்றவாளிகளை சிறையில் அடைக்க போலீசார் பல சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. போலீசார் பெரும்பாலும் குற்றவாளிகளை மாலை நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவல் உத்தரவு பெறுகிறாா்கள். அப்படி உள்ள சூழ்நிலையில் வேதாரண்யத்தில் இருந்து 50 கிலோமீட்டர் முதல் 120கிலோமீட்டர் வரை உள்ள கிளை சிறைச்சாலைக்குச் செல்ல ஒருநாள் இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள் சிறையில் குற்றவாளியை அடைத்து விட்டு திரும்ப பணிக்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிறது.

எனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள வேதாரண்யம் நீதிமன்றத்தை சார்ந்து வேதாரண்யம் பகுதியில் கிளை சிறை அமைக்க வேண்டும் என வேதாரண்யம் வக்கீல்கள் சங்கத்தினா் அரசுக்்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story