பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த திருடனை பிடிக்க முயன்ற மெக்கானிக் மோட்டார் சைக்கிள் ஏற்றி கொலை


பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த திருடனை பிடிக்க முயன்ற மெக்கானிக் மோட்டார் சைக்கிள் ஏற்றி கொலை
x

பெண்ணிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற திருடனை பிடிக்க முயன்றபோது மெக்கானிக் மோட்டார் சைக்கிள் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ரேகா (வயது 33). இவர், நேற்று மொபட்டில் ராப்பூசலில் இருந்து கீரனூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரை பின்தொடர்ந்து திருநல்லூர் சேதுராபட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சின்னராஜ் (23) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

திடீரென அவர் ரேகா அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை சின்னராஜ் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இதையடுத்து ரேகா திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டபடியே அவரை விரட்டிக்கொண்டு சென்றார். இதற்கிடையே மொபட்டில் எஸ்.நாங்குபட்டியில் உள்ள தனது உறவினர்கள் சிலருக்கு, ரேகா செல்போன் மூலம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.

மெக்கானிக் சாவு

இதையடுத்து துலுக்கம்பட்டி அருகே, சின்னராஜை மடக்கி பிடிக்க ரேகாவின் உறவினர்கள் உள்பட சிலர் காத்திருந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஆனந்த முத்துக்குமார் (47) என்பவர் சாலையின் குறுக்கே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சாலையை மறித்து நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சின்னராஜ், ஆனந்தமுத்துக்குமார் மீது மோட்டார் சைக்கிளால் மோதினார். இதில் ஆனந்தமுத்துக்குமார் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே தப்பியோட முயன்ற திருடன் சின்னரா பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story