தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடத்தி ஆய்வு செய்யப்படும்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடத்தி ஆய்வு செய்யப்படும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்
கடலூர்
தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 34 ஆயிரத்து 184 மாணவர்களில், 30 ஆயிரத்து 248 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 88.49 சதவீதம் ஆகும். இதன் மூலம் மாநில அளவில் கடலூர் மாவட்டம் 33-வது இடத்தை பிடித்தது. ஆனால் கடந்த கல்வி ஆண்டில் 89.60 சதவீதம் பெற்று மாநில அளவில் 18-வது இடத்தில் இருந்தது. தற்போது தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளதால், இதற்கான காரணம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, கடந்த ஆண்டை விட இந்த கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தை கூட்டி, இது பற்றி ஆய்வு செய்யப்படும். அதில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.