மினி பஸ்சில் பிடித்த பாடலை வைக்காத டிரைவர் மீது கொலை வெறித் தாக்குதல்...!


மினி பஸ்சில் பிடித்த பாடலை வைக்காத டிரைவர் மீது கொலை வெறித் தாக்குதல்...!
x
தினத்தந்தி 10 Aug 2022 10:54 AM GMT (Updated: 10 Aug 2022 10:55 AM GMT)

நாகை அருகே மினி பஸ்சில் பாடலை மாற்றி வேறு பாடல் வைக்காததால் டிரைவரை 3 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை,

நாகை அருகே அகலங்கன் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாரதி (வயது 25). தனியார் மினி பஸ் டிரைவர். நேற்று நாகையில் இருந்து ஆய்மழை கிராமத்திற்கு பஸ்சை ஒட்டி வந்துள்ளார்.

நாகை கோட்டைவாசல்படி பஸ் நிறுத்தத்தில் நாகை ஒன்றியம் அகரஒரத்தூர்,காலனி தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் அஜித் (வயது 27). மற்றும் சிக்கல் பொன்வெளி ராஜேஷ் இருவரும் ஏறி உள்ளனர்

மினி பஸ் சிறிது தூரம் சென்ற நிலையில் பஸ்சில் ஒலித்த பாடலை மாற்றி வேறு பாடல் வைக்குமாறு டிரைவர் இடம் கூறியுள்ளனர். டிரைவர் வேறு பாடலை மாற்றுவதற்கு வசதி இல்லாத நிலையில் உள்ளது என சொல்லியதாக கூறப்படுகிறது.

பின்னர், இருவரும் சிக்கல் பஸ் நிறுத்தம் பகுதியில் இறங்கி சென்று உள்ளனர்.

ஆய்மழை கிராமத்திற்கு சென்ற மினி பஸ் மீண்டும் நாகைக்கு வந்து கொண்டிருந்தது. சிக்கல் ரெயில்வே கேட் அருகே வரும் போது வேறு பாடல் வைக்காததால் ஆத்திரம் அடைந்த அஜித் மற்றும் ராஜேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மினிபஸ்சை சாலையில் வழிமறித்து நிறுத்தி உள்ளனர்.

பின்னர், மினிபஸ்சின் டிரைவர் பாரதி மற்றும் நடத்துனர் பாலமுருகன் ஆகிய இருவரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கி அஜித் மற்றும் ராஜேஷ் அவரது நண்பர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த டிரைவர் பாரதி நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகரஒரத்தூரை சேர்ந்த அஜித்தை கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பாக சிக்கல் பொன்வெளியை சேர்ந்த ராஜேஷ், அரவிந்தன், அக்கரைப்பேட்டை கதிர்வேல் உள்பட 3 பேரை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story