16 வயதில் குழந்தை பெற்றெடுத்த நர்சிங் மாணவி


16 வயதில் குழந்தை பெற்றெடுத்த நர்சிங் மாணவி
x
தினத்தந்தி 16 Aug 2023 7:45 PM GMT (Updated: 16 Aug 2023 7:46 PM GMT)

தேனியில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான நர்சிங் மாணவி 16 வயதில் குழந்தை பெற்றெடுத்தார். அவரை பாலியல் பலாத்காரம் செய்த பெரியப்பா மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

சிறுமிக்கு பிரசவம்

தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். அவர், கடந்த 14-ந்தேதி கடுமையான வயிற்று வலி என்று கூறி தேனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அந்த மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 15-ந்தேதி நள்ளிரவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 16 வயது பெண்ணுக்கு நடந்த பிரசவம் குறித்து போலீசாருக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கும் மருத்துவத்துறையினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

பெரியப்பா மகன்

அப்போது அந்த சிறுமி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், 'எனது பெற்றோர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். எனது பெரியப்பா மகன் கூலி வேலை பார்த்து வருகிறார். அவருக்கு வயது 27. எங்கள் வீட்டுக்கு வந்த அவர் அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்நிலையில் அவருடைய வீட்டுக்கு நான் சென்றிருந்த போது என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் என்னை மிரட்டி பலமுறை உறவு வைத்துக் கொண்டார்என்று கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், சிறுமியின் பெரியப்பா மகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story