மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் போலீஸ்காரர் பலி


மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் போலீஸ்காரர் பலி
x

மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.. 61 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்ட காளைகள்

இதில் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனால் நாலா புறமும் சுற்றி நின்ற பொதுமக்களை பார்த்து காளைகள் மிரண்டு ஓடின. சில காளைகள் பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்து அவர்களை பதம் பார்த்தது. இதனால் போலீசாரும், விழா கமிட்டியினரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

மஞ்சுவிரட்டை பார்க்க வந்த கே.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி சுப்பிரமணியன் (வயது 30) என்பவர் வயிற்றில் காளை முட்டியது. இதில் குடல் சரிந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ்காரர் சாவு

இதற்கிடையே மீமிசல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த நவநீதகிருஷ்ணன் (30) என்பவர் மாற்று பணியாக கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மேலும் போலீஸ்காரர்கள் சரக்கு வேனில் நின்று கொண்டு கூட்டத்தினரை கட்டுப்படுத்தினார்கள்.

அப்போது மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க வந்த பார்வையாளர்களில் சிலர் மஞ்சுவிரட்டு திடலுக்குள் சென்றனர். இதனை கண்ட நவநீதகிருஷ்ணன் அவர்களை அப்புறப்படுத்த சரக்கு வேனில் இருந்து இறங்கி அவர்களை திடலில் இருந்து வெளியே செல்லும்படி கூறினார். அப்போது அங்கிருந்து வந்த காளை நவநீதகிருஷ்ணன் நெஞ்சில் முட்டி தூக்கி எறிந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் மேலும் 61 பேர் காயம் அடைந்தனர்.


Next Story