பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கட்டிட தொழிலாளி கைது
புதுக்கோட்டை அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவருடைய மனைவி சரசுவதி (வயது 58). இவர், கட்டிட தொழிலாளியான கூட்டாம்புளி பொன்நகரை சேர்ந்த வேல்ராஜா மகன் மாரிமுத்து (27) என்பவரிடம் கட்டிட கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தாராம். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மாரிமுத்து, குடிபோதையில் சரசுவதி வீட்டுக்கு சென்று தகராறு செய்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து மாரிமுத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story