மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x

பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கனரா வங்கி தெருவில் வசித்து வருபவர் செல்வநாயகம். இவர் பத்திர எழுத்தர் ஆவார். இவருடைய மகன் விக்னேஷ் பாண்டி (வயது 28). இவர் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இவரது நண்பர் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தை சேர்ந்த சுரேஷ் மகன் விக்னேஷ் (29).

நேற்று முன்தினம் இரவு விக்னேஷ், மத்தளம்பாறையில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். விக்னேஷ் பாண்டி மோட்டார் சைக்கிளில் பின்னால் ஒரு நாயை கையில் வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.

நெல்லை- தென்காசி சாலையில் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள ராமச்சந்திர பட்டணம் ஊரில் உள்ள வேகத்தடை அருகில் வந்தபோது, இவர்கள் கொண்டு சென்ற நாய் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து தப்பி ஓடியது. அதனை பிடிக்க முயன்ற விக்னேஷ் பாண்டி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி ரோட்டில் விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இவர் மீது ஏறியது. இதில் அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விக்னேஷ் பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story