பொய்யான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை
சமூகவலைத்தளங்களில் பொய்யான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது தொடர்பாக சம்பவம் நடந்த அன்று நள்ளிரவில் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. இதுசம்பந்தமாக விசாரணை செய்தபோது அந்த வீடியோ சேலம் மாவட்டம், வாழப்பாடி போலீஸ் நிலையம், சிங்கபுரம் அரசு பள்ளியில் உள்ள மடிக்கணினியை திருட முயற்சி செய்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ என்று தெரியவருகிறது.
இந்த சம்பவத்தை வேறுவிதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய் செய்தியை மக்கள் மத்தியில் பரப்பி கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சட்டம்- ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.