ரூ.74 லட்சம் மோசடி வழக்கில் நடிகை அல்போன்சா தங்கை கைது


ரூ.74 லட்சம் மோசடி வழக்கில் நடிகை அல்போன்சா தங்கை கைது
x

வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக ரூ.74 லட்சம் மோசடி செய்ததாக நடிகை அல்போன்சாவின் தங்கை கைது செய்யப்பட்டார்.

சென்னை,

பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்தவர் அல்போன்சா. இவரது தங்கை ஷோபா (வயது 40). இவர் சென்னை கேளம்பாக்கம் பகுதியில் வசிக்கிறார். கனடா, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் கை நிறைய சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாக இணையதளம் வாயிலாக விளம்பரப்படுத்தினார்.இதை நம்பி அவரை பலர் தொடர்பு கொண்டனர். அவர் 17 பேரிடம் ரூ.74 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்துவிட்டார் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு

அதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் சுரேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலாராணி, சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 10 மாதங்களாக ஷோபா போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். வளசரவாக்கத்தில் பிளாஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்த ஷோபா போலீசார் தேடுவதை அறிந்ததும் அதை மூடிவிட்டார்.

கைது

இதற்கிடையே அம்பத்தூரை சேர்ந்த அஷ்ரப் அகமது என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் ஷோபாவை தேடி வந்தனர். நேற்று அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.


Next Story