அதிக விபத்து பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கை பலகை


அதிக விபத்து பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கை பலகை
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:46 PM GMT)

அதிக விபத்து நடைபெறும் பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணுசந்திரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம்

அதிக விபத்து நடைபெறும் பகுதிகளில் கூடுதல் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணுசந்திரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து துறையின் மூலம் சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வட்டார போக்குவரத்துத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பாதுகாப்பு திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் முக்கிய சந்திப்பு சாலைகளில் உரிய பாதுகாப்பு எச்சரிக்கை விளம்பரங்களை வைத்து கண்காணித்திட வேண்டும். அதேபோல் காவல்துறை, வட்டார போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்து தேசிய சாலைகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து விபத்துகளை தடுக்கும் வகையில் சாலைகளை சீரமைப்பதுடன் உரிய எச்சரிக்கை விளம்பரப்பலகை வைக்க வேண்டும்.

விழிப்புணர்வு

அதிக மக்கள் பயன்படுத்தும் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும். கிராம சாலைகளுக்கும், தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் உரிய எச்சரிக்கை பலகை வைத்திட வேண்டும். மாலை நேரங்களில் வட்டார போக்குவரத்துத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து கள ஆய்வு செய்து அதிக வேகத்தில் வரும் வாகன ஓட்டிகளை எச்சரிப்பதுடன் வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு எவ்வித விபத்தும் ஏற்படாத வகையில் பயணம் செய்ய போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாரிச்செல்வி. வருவாய் கோட்டாட்சியர் கோபு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பிரேம் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story