பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசன பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசன பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
x

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. 105 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, கீழ்பவானி வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால் வழியாக சுமார் 2½ லட்சம் ஏக்கம் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது.

காலிங்கராயன் பாசனத்துக்கு...

பவானிசாகர் அணையில் இருந்து நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி முதல் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதேபோல் பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 150 கன அடி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் நிறுத்தம்

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த மாதம் 28-ந் தேதி தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியாக குறைக்கப்பட்டது. கடந்த 1-ந் தேதி காலை 8 மணி முதல் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியாக மேலும் குறைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணி முதல் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை, பாசன பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

நேற்று காலை 8 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.04 அடியாக இருந்தது. அணைக்கு 254 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது.


Next Story