'அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது' எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு


அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
x

‘அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது’ என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

கிருஷ்ணகிரி,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து காரில் சென்னை புறப்பட்டு வந்தார். வழியில் அவருக்கு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

கிருஷ்ணகிரியில் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பதவிக்கு வருவார்கள். ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி அல்ல. உழைப்பவர் உயர்ந்த பதவியை அடையலாம். இதற்கு நானே சான்று. அ.தி.மு.க.வை எந்த அவதாரம் எடுத்தாலும் மு.க.ஸ்டாலினால் அழிக்க முடியாது. அ.தி.மு.க.வில் இன்று சில விஷமிகள் சோதனையை உருவாக்கி வருகிறார்கள். அந்த கருப்பு ஆடுகளை மக்கள் அடையாளம் கண்டுபிடித்து விட்டனர்.

பழி வாங்கும் நடவடிக்கை

எதிரிகளுடனும், துரோகிகளுடனும் சிலர் கைகோர்த்து அவர்கள் செய்த சதியின் காரணமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது. இனி வரக்கூடிய தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். தி.மு.க.வின் 14 மாத ஆட்சி காலத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் செய்துள்ளார்கள். அது தான் அவர்களின் 14 மாத கால சாதனை. தி.மு.க. ஆட்சியில் பழி வாங்கும் நடவடிக்கையாக முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர் மீது வழக்குகள் பதிவு செய்கிறார்கள். இதை செய்வதால் அ.தி.மு.க.வை முடக்கி விட முடியுமா?. தைரியம் இருந்தால் நேரடியாக அரசியல் ரீதியாக சந்தியுங்கள். நாங்கள் சந்திக்க தயார். குறுக்கு வழியில் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்கள். அது எந்த சக்தியாலும் முடியாது.

துரோகிகள்

அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் கேட்டை உடைத்து ஜெயலலிதாவின் அறைக்கு சென்று அங்கிருந்த கணினிகள், ஆவணங்கள், சொத்து பத்திரங்களை திருடி சென்றார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். அவர் கட்சி தலைவராக இருக்க முடியுமா?

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் ஒன்றரை கோடி தொண்டர்களின் கோவிலாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரியில் தொண்டர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'அ.தி.மு.க.வை உடைக்க சில துரோகிகள் மு.க.ஸ்டாலின் அரசு ஆதரவுடன் இணைந்து முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் மூலம் தக்க பாடம் கற்பிக்கப்படும். துரோகிகள் யார்? என்பதை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உணர்ந்து விட்டனர்' என்றார்.


Next Story