அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணை..!


அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணை..!
x

அதிமுக பொதுக்குழு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஒரு மாத இடைவெளிக்கு பின் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்றில்லை. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

கட்சி செயல்பாடு தொடர்ந்து முடங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் நியமனத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் ஓபிஎஸ் எந்த உரிமையும் கோர முடியாது. ஒற்றைத் தலைமையை மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் கட்சியின் பழைய நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கட்சி விதிகளின்படியே, விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, அதில் எந்த தவறும் இல்லை.

பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் தலைவராக, முதல்வராக இருந்திருக்கலாம். தலைவர்கள் வரலாம், போகலாம். மக்களின் விருப்பப்படிதான் கட்சி தொடர வேண்டும். அனைத்து நடவடிக்கைகளும் கட்சி நலன்கருதியே எடுக்கப்பட்டன. நிர்வாகிகளை நியமித்து இணையாக கட்சி நடத்தும் நபர், பதவிப்பசி காரணமாகவே இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்" என்று வாதிட்டார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது.


Next Story