அதிமுக பொதுச்செயலாளர் - தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த ஆவணம்


அதிமுக பொதுச்செயலாளர் - தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த ஆவணம்
x
தினத்தந்தி 31 March 2023 1:28 PM GMT (Updated: 31 March 2023 1:35 PM GMT)

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்தற்கான ஆவணங்கள் இந்திய தலைமைத்தேர்தல் ஆணைத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

சென்னை,

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பில் விதிகள் மீறப்பட்டுள்ளன. இதனால் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை ஏற்க கூடாது. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த கூடாது என வாதம் முன்வைக்கப்பட்டது. மாறாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதிமுகவில் பொதுக்குழுவுக்கு தான் உச்சப்பட்ச அதிகாரம் உள்ளது. விதிகளின் படியே செயல்பாடு உள்ளது. இதனால் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம். ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடந்து முடிந்தது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

அதன்படி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநீதிபதி தள்ளுபடி செய்த மனுவை எதிர்த்து இருவர் அமர்வில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது பற்றிய விபரங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இமெயில் மற்றும் தபால் மூலம் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்பதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர், தலைமை தேர்தல் அதிகாரி என அனைவருக்கும் ஆவணங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளது அதிமுக.


Next Story