எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x

வாணியம்பாடி அருகே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

வாணியம்பாடியில் இருந்து தும்பேரி வழியாக ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் கர்நாடாக மாநிலத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில், தும்பேரி கூட்டுரோடு பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடுகள், கடைகள் கட்டி ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டது.

அப்போது ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும், இந்த ஆக்கிரமிப்புகளினால் தும்பேரி கூட்டுரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறி மற்றொரு தரப்பினர் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 2 நாட்களுக்கு முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லோகநாதன், உதவி கோட்ட பொறியாளர் அன்புஎழில் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர், தாசில்தார் சம்பத், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ஜெயலட்சுமி, அருண்குமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் கூட்டுரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் என 37 கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

அப்போது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.

இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 30 ஆண்டுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் நிறுவப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலை மற்றும் அதே பகுதியில் இருந்த ஜெயலலிதா சிலையை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், ஒன்றிய செயலாளர்கள் சாம்ராஜ், சீனிவாசன், நகர செயலாளர் சதாசிவம், துணை செயலாளர் கோவிந்தன், பொருளாளர் தன்ராஜ், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர், சிலைகளை அகற்றகூடாது என்றும்,

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், தாசில்தார் சம்பத் மற்றும் நெடுஞ்சாலைதுறை, வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து கூறி இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story