சுண்டலுக்கு பணம் கேட்டதால் டாஸ்மாக் பாரில் தகராறு - ஊழியருக்கு அரிவாள் வெட்டு...!


சுண்டலுக்கு பணம் கேட்டதால் டாஸ்மாக் பாரில் தகராறு - ஊழியருக்கு அரிவாள் வெட்டு...!
x

பல்லடம் அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அவரபாளையத்தில் அரசு மதுபானக்கடை பார் உள்ளது. இங்கு நேற்று வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் மது அருந்த சென்றுள்ளார்.அப்போது பாண்டியராஜன் மது அருந்தும் போது பாரில் வாங்கிய சுண்டலுக்கு பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை பாரில் வேலை செய்யும் அங்குசாமி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். அதற்கு, நான் வீரபாண்டியில் பெரிய ஆள் என்னிடமே நீ பணம் கேட்கிறாயா என்று பாண்டியராஜன் மிரட்டியுள்ளார்.

இதற்கு பயப்படாத அங்குசாமி, பணத்தை கொடுத்துவிட்டு வேலையை பார் என்று தெரிவித்துள்ளார். இதனால் பாண்டியராஜன் பணத்தை கொடுத்துவிட்டு சென்று உள்ளார். பின்னர், இரவு 8 மணிக்கும் தனது நண்பர்கள் 2 பேரை அழைத்து கொண்டு பாருக்கு வந்த பாண்டியராஜன், அங்கு சாமியிடம் தகராறு செய்துள்ளனர்.

இதில் ஏற்பட்ட கைகலப்பில் பார் ஊழியர் அங்குசாமியின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அங்குசாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story