பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டிகள்


பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

பெரம்பலூர்

தடகள போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகள போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையர்கண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், மும்முறை தாண்டுதல் ஓட்டம், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

பதக்கம், சான்றிதழ்

இதில் ஏற்கனவே பெரம்பலூர், குன்னம் குறு வட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட தடகள விளையாட்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. நேற்று நடந்த தடகள விளையாட்டு போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல் போட்டிகளில் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கார்த்திகா என்ற மாணவி முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். இந்த போட்டிகளில் முதலிடம் பிடித்த வீராங்கனைகள் மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.


Next Story