ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி; வாலிபர் சிக்கினார்


ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி; வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஏ.டி.எம். மையம்

தூத்துக்குடி போல்பேட்டை மெயின் ரோட்டில் ஒரு வங்கி ஏ.டி.எம். அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் நுழைந்து உள்ளார். அவர் திடீரென அந்த ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தினாராம். ஆனால் அதனை உடைக்க முடியவில்லை.

இதனால் அதன் அருகே இருந்த வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யக்கூடிய எந்திரத்தை உடைத்து உள்ளார். அதில் இருந்த பிரிண்டரை எடுத்து வெளியில் போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

கைது

அதன்பிறகு அங்கு பணம் எடுப்பதற்காக வந்தவர், ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதன்பிறகு அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த தேவராஜ் என்ற சாம் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story