விவசாயி மீது தாக்குதல்


விவசாயி மீது தாக்குதல்
x

நிலக்கோட்டை அருகே விவசாயியியை தாக்கிய 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 24). கூலித்தொழிலாளி. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கே. பெருமாள்பட்டியை சேர்ந்த விவசாயி தங்கவேல் (38). நண்பர்களான இவர்கள் 2 பேரும், அணைப்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் அவர்களிடம் பீடி, சிகரெட், புகையிலை இருக்கிறதா? என்று கேட்டனர். அதற்கு தங்கவேல், நான் என்ன கடையா வைத்திருக்கிறேன் என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த 9 பேரும் சேர்ந்து, தங்கவேலை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் காயம் அடைந்த தங்கவேலுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து 9 பேரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story