ஆழ்வார்ப்பேட்டை கேளிக்கை விடுதி விபத்து: ரெயில் பணி காரணமா..? - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்


ஆழ்வார்ப்பேட்டை கேளிக்கை விடுதி விபத்து: ரெயில் பணி காரணமா..? - மெட்ரோ நிர்வாகம் விளக்கம்
x

மெட்ரோ ரெயில் பணி காரணமாக ஆழ்வார்ப்பேட்டை கேளிக்கை விடுதி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் பரவியது.

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் மேற்கூரை, இன்று இரவு எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடலை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த மூவரும் வடமாநில தொழிலாளர்கள் என்று முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக ஆழ்வார்ப்பேட்டை கேளிக்கை விடுதி விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் பரவியது. இதைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் விபத்து நடந்த கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து இந்த விபத்துக்கு மெட்ரோ ரெயில் பணி காரணம் இல்லை என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில், விபத்து நடைபெற்ற கட்டிடத்தில் இருந்து 240 அடி தொலைவில்தான் மெட்ரொ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே மெட்ரோ ரெயில் கட்டுமான பணி அதிர்வுகளால் இந்த விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story