விவசாயி கட்டையால் அடித்துக்கொலை


விவசாயி கட்டையால் அடித்துக்கொலை
x

சூளகிரி அருகே மதுபோதையில் தகராறு செய்ததால் விவசாயி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி, மகளை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி

சூளகிரி

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது 50). விவசாயி. இவருக்கு யசோதா (42) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். வெங்கட்ராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் மது குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மகள்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல் மது குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யசோதா, இவரது மகள் சுஷ்மிதா (25) ஆகிய 2 பேரும், வெங்கட்ராஜை கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்ராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று வெங்கட்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து யசோதா, இவரது மகள் சுஷ்மிதா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

விவசாயியை மனைவி, மகள் அடித்து கொன்ற சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story