நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு


நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
x

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குவது பவானிசாகர் அணை.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்தநிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறப்பதாலும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,032 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.73 அடியாக இருந்தது.

நேற்று மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2,394 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 83.27 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீரு், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story