வினாடிக்கு 7,389 கன அடி தண்ணீர் வருகிறது பவானிசாகர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்வு


வினாடிக்கு 7,389 கன அடி தண்ணீர் வருகிறது பவானிசாகர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்வு
x

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 389 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 389 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை மற்றும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

பாசன வசதி

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.

கடந்த 4-ந் தேதி மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,082 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 82..73 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்துக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

நீர்வரத்து உயர்வு

இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 389 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 84.66 அடியாக இருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு 3 நாட்களில் பவானிசாகர் அணை நீர்மட்டம் சுமார் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், பாசனத்துக்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story