அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கியதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாறும் பவானிசாகர் அணையின் நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் சத்தியமங்கலம், கோபி, பவானி உள்ளிட்ட நகராட்சி பகுதிகளுக்கும், இது தவிர பல்வேறு பேரூராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

தடப்பள்ளி அரக்கன் கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன பகுதிகளில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலமும், கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகளில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி, அவலாஞ்சி, மேல் பவானி, எமரால்டு, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அங்கிருந்து உபரிநீர் முழுவதும் மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. இதன்காரணமாகவும் பவானிசாகர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்தது.

நேற்று மாலை 4 மணிஅளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.18 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 814 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1100 கன அடி தண்ணீரும், பவானிசாகர் வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை தொட இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்படும் நிலை உள்ளது. இதனால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை, காவல் துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள பவானி ஆற்றின் கரையின் இருபுறத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்தந்த நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் சார்பில் தண்டோரா போட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கை முன்னிட்டு வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் பவானிசாகர் அணையின் மேல் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். குடும்பத்தினர், நண்பர்கள் புடைசூழ அணையின் மேல் பகுதிக்கு சென்று கடல் போல் காட்சியளிக்கும் நீர்த்தேக்க பகுதியை கண்டு ரசிப்பது வழக்கம். ஆனால் தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நெருங்கும் நிலையில் இருப்பதால் பாதுகாப்பு கருதி அணையின் மேல் பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.


Next Story