சிவகங்கை புத்தக திருவிழாவில் ரூ.5 கோடியே 45 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை- கலெக்டர் தகவல்
சிவகங்கையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ.5 கோடியே 45 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை செய்யபட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ரூ.5 கோடியே 45 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை செய்யபட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.
புத்தக திருவிழா
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் புத்தக திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா 11 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டஇயக்குனர் வானதி வரவேற்று பேசினார்.
விழாவில் கலெக்டர் கூறியதாவது:- புத்தக வாசிப்பினை மக்கள் இயக்கமாக உருவெடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும், புத்தக திருவிழா நடத்துவதற்கென அரசாணை பிறப்பித்து, பொதுமக்களிடையே வாசிப்புத்திறன் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில், சிவகங்கையில் புத்தக திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா கடந்த 11 நாட்கள் நடைபெற்றது. இந்த புத்தக திருவிழாவில் அமைச்சர் பெரியகருப்பன் 4 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.
அறிவுத்திறனை மேம்படுத்தும்
ப.சிதம்பரம் எம்.பி. ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்களை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். மேலும் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளை சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தும் பொருட்டு, அவர்களது ஊராட்சியின் சார்பில் நூலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதுதவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நன்கொடையாளர்கள், பல்வேறு துறைகளை சார்ந்த அரசு முதன்மை அலுவலர்கள் ஒருங்கிணைந்து தாமாகவே முன்வந்து, மாவட்டத்தில் 400 பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு நூல்களை இந்த புத்தக திருவிழாவின் மூலம் வழங்கியுள்ளனர்.
கடந்தாண்டு நடைபெற்ற விழாவில் பபாசி நிறுவனத்தின் சார்பில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையானது. இந்தாண்டு ரூ.5 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புத்தகம் விற்பனை நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து புத்தகதிருவிழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய அதிகாரிகளுக்கு சான்றிழ்களை கலெக்டர் வழங்கினார். இதில், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்க செயலாளர் முருகன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவிதிட்ட அலுவலர் விஷ்ணுபரன் நன்றி கூறினார்.