மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு


மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாய குழுக்களுக்கு கலெக்டர் முருகேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாய குழுக்களுக்கு கலெக்டர் முருகேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம்

தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் மானியத்தில் அமைக்கும் திட்டத்தினை 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது.

இந்த ஆண்டு 22 மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக்கூட்டி, அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிட மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் அமைக்கப்படுகின்றன.

வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டும் எந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம்.

எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் எந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் போன்றவற்றில் விவசாய குழுக்கள் தங்களுக்கு எந்த வகை எந்திரங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் தேவையோ அவற்றினை மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் வாங்கி மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

கூடுதலாக 20 சதவீதம் மானியம்

மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய குழுக்களுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மானிய விலையில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசபாக்கம், போளூர் தாலுகா விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தினையும், ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு தாலுகா விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஆரணி மில்லர்ஸ் சாலையில் வேளாண் வணிக விற்பனை மைய வளாகத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தினையும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் மாவட்ட அளவில் வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் அலுவலகத்தையும் அணுகலாம். கூடுதல் விவரங்களை www.mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story