கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42-வது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த கால கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது.

மாநில அரசின் சில அதிகாரங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976-ம் ஆண்டு, மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது, கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது. கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றிம் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரசியல் சட்ட பிரச்னை தொடர்பான இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை அமைக்க வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க உத்தரவிட்டுள்ளனர்.


Next Story