அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை


அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை
x

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியாக கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர்.

கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து அதிரடியாக அவர்கள் உள்ளே புகுந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் - கலவரம் வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கலவரத்தை தணிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். மயிலாப்பூர் தாசில்தார் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் கட்சி அலுவலகம் கொண்டு வரப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொரப்பட்டது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதன் மூலம் இருதரப்பு ஆதரவாளர்கள் இடையே தொடர்ந்து மனக்கசப்பு இருந்து வருகிறது. எதிர்ப்பு அலையும் வீசிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை, நடத்திய நிலையில் தற்போது மீண்டும் தங்களின் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் .

அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் நேற்று சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விசரணையில் பல்வேறு தகவல்களை திரட்டிய சிபிசிஐடி காவல்துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story