குழாயில் குடிநீர் கலங்கலாக வந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்


குழாயில் குடிநீர் கலங்கலாக வந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
x

குழாயில் குடிநீர் கலங்கலாக வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து நூத்தப்பூர் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு தெருக்குழாயில் வந்த குடிநீர் கலங்கலாக மாசு ஏற்பட்ட நிலையில் வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இதேபோன்று குடிநீர் வந்ததால், ஊராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் நேற்று திடீரென பொதுமக்கள் நூத்தப்பூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கை.களத்தூரில் இருந்து நூத்தப்பூர் வழியாக பெரம்பலூர் செல்வதற்கு வந்த அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது பற்றி தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விரைவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story