9-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை


9-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 Jan 2023 7:13 PM GMT (Updated: 3 Jan 2023 7:14 PM GMT)

மேச்சேரி அருகே அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 9-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

மேச்சேரி:-

மேச்சேரி அருகே அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் 9-ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரசு பள்ளி மாணவி

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கூனாண்டியூர் மாயவன் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். இவருடைய 2-வது மகள் தீபிகா (வயது 14). இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி தீபிகா கடந்த தேர்வுகளில் மதிப்பெண் குறைவாகவே பெற்று வந்துள்ளார். இதனிடையே நடந்து முடிந்த அரையாண்டு தேர்விலும் மதிப்பெண் குறைவாக பெற்று இருந்தார். இதனால் தீபிகா மிகுந்த மனவேதனை அடைந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி தீபிகா, தனது வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே மகளை காணாததால், பெற்றோர் அக்கம்பக்கத்தில் ேதடினர். அப்போது அங்குள்ள கிணற்றில் தீபிகாவின் துப்பட்டா, செருப்பு மிதந்தது. இதைத்தொடர்ந்து மேச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றில் இருந்து மாணவி தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story