காதலனுடன் விஷம் குடித்த 9-ம் வகுப்பு மாணவி சாவு
விருத்தாசலம் அருகே காதலனுடன் சேர்ந்து விஷம் குடித்த 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்
விருத்தாசலம்
என்ஜினீயருடன் காதல்
விருத்தாசலம் அருகே உள்ள முகுந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அஜித்குமார்(வயது 27). என்ஜினீயரான இவர், தொரவளூரைச் சேர்ந்த அவரது உறவினரான ராமச்சந்திரன் மகள் சங்கீதா(14) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சங்கீதா தொரவளூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் சங்கீதா திருமண வயதை எட்டவில்லை என்பதால் உரிய வயது வந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.
விஷம் குடித்த ஜோடி
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சங்கீதாவும், அஜித்குமாரும் சேர்ந்து வாழ முடியாத விரக்தியில் இருவரும் சங்கீதாவின் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சங்கீதா பரிதாபமாக இறந்தார்.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அஜித்குமார் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
உறவினர்கள் கதறல்
இந்த நிலையில் சங்கீதா இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.