'தினத்தந்தி' செய்தி எதிரொலி:தஞ்சை அரண்மனைக்கு செல்லும் வழியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்
![தினத்தந்தி செய்தி எதிரொலி:தஞ்சை அரண்மனைக்கு செல்லும் வழியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம் தினத்தந்தி செய்தி எதிரொலி:தஞ்சை அரண்மனைக்கு செல்லும் வழியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/24/1254744-14557004.webp)
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக தஞ்சை அரண்மனைக்கு செல்லும் வழியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றபட்டன.
தஞ்சை அரண்மனைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அரண்மனை வளாகத்தில் உள்ள மணிக்கோபுரத்தின் அருகே உள்ள விவசாயி சிலைக்கு நேர் எதிரே மனோஜியப்பா வீதி வழியாக அரண்மனைக்குள் செல்வதற்கும் பாதை உள்ளது. இந்த பாதையை மானோஜியப்பா வீதி மற்றும் அதனை சுற்றி உள்ளவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பாதை செல்லும் வழியில் அரண்மனை மைதானத்தில் நுழையும் இடத்தில் இரும்பு கேட்டும் போடப்பட்டுள்ளது. இந்த கேட் போடப்பட்டுள்ள இடத்தின் அருகே குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசியது. இது தொடர்பாக நேற்று 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கேட்டின் இருபகுதியிலும் இருந்த குப்பைகள் முற்றிலும் அகற்றப்பட்டு அந்த பகுதி தூய்மையாக காட்சி அளித்தது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இது தொடர்பாக செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.