தனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்


தனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்
x

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 182 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 3-வது மணல் திட்டு பகுதியில் அகதிகள் சிலர் தவிப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து இந்திய கடலோர போலீசார் மீனவர்கள் உதவியுடன் மணல் திட்டு பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு மணல் திட்டில் தவித்த மூன்று அகதிகளை மீட்டு ராமேசுவரம் கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து கடலோர போலீசார் அவர்களை வாகனத்தில் ஏற்றி மண்டபம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி (வயது 42), இவரது மகன் அஜந்தன் (வயது 17) மகள் சுரபி (11) ஆகிய 3 பெரும் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கையில் அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளது. அங்கு வேலை வாய்ப்பு எதுவும் இல்லை. மேலும் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பிள்ளைகளோடு தனியாக வாழ்ந்த வருவதாக கூறினார்.

இதனால் உறவினர்களோடு சேர்ந்து வாழ்வதற்காக படகோட்டிக்கு ரூ. 2 லட்சம் பணம் கொடுத்து இங்கு வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

போலீசாரின் விசாரணைக்கு பின்னர் 3 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story