ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு
தியாகதுருகம்
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி துறை பணிகள் குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை விரைந்து முடித்திடவும், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு அதற்கான தொகையை விரைந்து வழங்கிடவும் பொறியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் புதிதாக ரூ.3 கோடியே 55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு அதை விரைந்து முடித்து அலுவலக பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன், சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கொளஞ்சிவேலு, சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.