பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க குழு அமைப்பு


பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க குழு அமைப்பு
x
தினத்தந்தி 3 Aug 2022 4:49 PM GMT (Updated: 3 Aug 2022 5:05 PM GMT)

பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அவர்கள் பணிபுரியும் இடத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறைசார்பில் புகாா் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் தொழிற்சாலைகள், ஆலைகள், நிறுவனங்கள், சிறு மற்றும் பெரிய கடைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அலுவலக உட்புகார் குழு அமைத்திட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட நிர்வாகத்தின்கீழ் பணிபுரியும் பெண் பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் அலுவலக வளாகத்தில் பாலியல் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார் பெட்டி தொடர்பான புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து மேற்கண்ட குழுக்களின் விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு கலெக்டர் வழங்கினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



Next Story