ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து


ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

தேசிய சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி

ஏரல்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 22 மாநிலங்கள் பங்கு பெற்ற தேசிய அளவிலான சிலம்பு போட்டி நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டம் அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் ஏரல் பகுதி சிலம்பு கலைக்குழு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் சிலம்பு சண்டை, அலங்கார வீச்சு, வேல் கம்பு வீச்சு பிரிவில் 9 தங்கப்பதக்கம் மற்றும் 5 வெள்ளிப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.

மேலும் இந்த வீரர்கள் மே மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் சர்வ தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கு பெற தேர்வு பெற்றுள்ளனர். இதையடுத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பயிற்சி அளித்த பயிற்சியாளர் மணிராஜ் ஆகியோரை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லகண்ணு, பொருளாளர் எடிசன், மாவட்ட பொதுச் செயலாளர் சிவகளை பிச்சையா, தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளர் மதிவாணன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏரல் அருகே உள்ள கொற்கை சென்னல் மாநகரை சேர்ந்தவர் தொழிலாளி ராமச்சந்திரன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாழவல்லான் தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி வழங்கப்பட்டது. அப்போது ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, அவரது மகள் வேனிஷா மேல் படிப்புக்கு தான் பொறுப்பேற்பதாக கூறிவிட்டு சென்றார்.

தற்போது ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று திருச்செந்தூர் தனியார் கல்லூரியில் படித்து வரும் வேனிஷாவுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து கல்வி கட்டணத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத், பஞ்சாயத்து தலைவர்கள் கொற்கை முருகேசன், கொட்டாரக்குறிச்சி துரை, சூளைவாய்க்கால் வேங்கையன், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாசன் மற்றும் காமராஜ் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story