ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

பென்னாகரம்,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடகா மாநில மலை மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அணையின் பாதுகாப்பு கருவி அணையில் இருந்து 23,471 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. மேலும்

தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான ஓசூர், தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காவிரி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 45ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

மேலும் அதிகரித்து மாலை 5 மணி நிலவரப்படி 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைந்தும் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும் பரிசில் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.


Next Story