குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் அதிகளவில் தண்ணீர் விழுவதால் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் அதிகளவில் தண்ணீர் விழுவதால் குளிக்க தடை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x

குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் அதிகளவில் தண்ணீர் விழுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று முன்தினம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

நேற்று காலையில் ஐந்தருவியில் நீர்வரத்து குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பகல் 11 மணிக்கு மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவிகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நேற்று இரவு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அந்த 3 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்றும் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச் வலைவை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. அனைத்து அருவி பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story