ஓசூரில்கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த மாடு; தீயணைப்பு படையினர் மீட்டனர்


ஓசூரில்கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த மாடு; தீயணைப்பு படையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 17 July 2023 7:30 PM GMT (Updated: 17 July 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் கழிவுநீர் கால்வாயில் தவறிவிழுந்த மாட்டை தீயணைப்பு படையினர் போராடி மீட்டனர்.

தவறிவிழுந்த மாடு

ஓசூர் பஸ் நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் 2 இடங்களில் திறந்த வெளியில் பெரிய கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அடிக்கடி அப்பகுதியில் உணவுக்காக சுற்றித்திரியும் காளை, பசு மாடுகள் விழுந்து விடுகின்றன. இதனை சாக்கடை கால்வாயில் இருந்து மீட்கும் பணிகளும் அவ்வப்போது நடக்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று கழிவுநீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது. இதைப்பார்த்த பொதுமக்கள், ஓசூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு வந்த தீயணைப்பு படையினர் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த மாட்டை, கயிறுகட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு

தீயணைப்பு படையினரின் பணிக்கு அப்பகுதியில் நின்ற வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் உதவினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கால்வாயில் விழுந்து தவித்துக்கொண்டிருந்த மாட்டை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

இந்த நிலையில், நீளமான கயிற்றால் கட்டப்பட்டிருந்த மாடு அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக துள்ளி குதித்து ஓடியது. வாகனங்களுக்கு இடையே மாடு துள்ளி ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் மற்றும் பொதுமக்கள், மாட்டை லாவகமாக பிடித்து அதில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தனர். அதன் பின்னர் மாடு அங்கிருந்து துள்ளிக்குதித்து ஓடியது. மாடு மீட்பு பணியால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கோரிக்கை

ஓசூர் பஸ் நிலையம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அடிக்கடி கால்நடைகள் விழுந்து தவிப்பதும், அதனை மீட்பதும் தொடர் கதையாக உள்ளது. எனவே இது போன்ற சாக்கடை கால்வாய்களை சுற்றி கம்பி வேலிகளை அமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story