அடை மழையிலும் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்


அடை மழையிலும் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
x

கொடைக்கானலில் பெய்த அடை மழையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அவதியடைந்தனர்.

திண்டுக்கல்

மழையும், வெயிலும்

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிர் பிரதேசங்களை தேடி தஞ்சம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தின் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும், கடந்த 27-ந்தேதி சுமார் 6 மணி நேரம் தொடர்ச்சியாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இருப்பினும் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.

அதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நட்சத்திர ஏரி மீண்டும் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது.

போக்குவரத்து நெரிசல்

இந்தநிலையில் நேற்று மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மேகங்கள் தரையிறங்கி குளிர்ச்சியான சூழல் உருவானது. மதியம் 2 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான சூழல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்தது. பின்னர் பலத்த மழையும் பெய்தது. இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இரவில் கடும் குளிர் நிலவியது.

இதற்கிடையே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும், நேற்று வார விடுமுறை என்பதாலும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கொடைக்கானலில் அடை மழை பெய்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி சுற்றுலா இடங்களை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது ஒரு புது அனுபவத்தை தந்ததாக உற்சாகத்துடன் தெரிவித்தனர். ஆனால் ஒரேநேரத்தில் பல்வேறு வாகனங்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்ததால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சில இடங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதன்பிறகு வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு சென்றனர்.

குடைபிடித்தபடி...

தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, தேவதை அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன், தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதேபோல் பைன்மரக்காடு, குணாகுகை, கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளையும் பார்வையிட்டனர். குறிப்பாக பைன்மரக்காட்டில் குடைபிடித்தபடி சுற்றுலா பயணிகள் சென்று பார்த்தனர்.

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பின. இதனால் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.


Next Story