'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176128888என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 9176128888என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திறந்து கிடக்கும் வாறுகால்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் எதிர்ப்புறம் வாறுகால் திறந்து கிடப்பதால், மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக செல்கிறவர்கள் வாறுகாலுக்குள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

-முருகன், நெல்லை.

சாலையோரம் குவிந்த குப்பைகள்

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி அருகில் இங்கிலிஷ் சர்ச் சாலையோரம் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. எனவே அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகள் வைத்து, குப்பைகளை தினமும் அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

-சாம், பரணிநகர்.

குப்பைக்கிடங்காக மாறிய கிணறு

திசையன்விளை பேரூராட்சி 10-வது வார்டு மேல பிள்ளைமார் தெருவில் இருந்து சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள பொது கிணறு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. அதில் சிலர் குப்பைகளை கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைக்கிடங்காக மாறிய கிணற்றை தூர்வாரி, மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-குமரகுரு, செல்வமருதூர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை ஒருவழிச்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-முகைதீன், பாளையங்கோட்டை.

ஆபத்தான தரைமட்ட கிணறு

ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் பஞ்சாயத்து கணக்கன்குளம் கிராமத்தின் எல்லையில் சாலையோரம் திறந்தவெளியில் தரைமட்ட கிணறு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் கிணற்றுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான தரைமட்ட கிணற்றை சுற்றிலும் தடுப்புச்சுவர் அல்லது கம்பிவேலி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

மின்மாற்றி வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?

பாளையங்கோட்டை சமாதானபுரம் ரவுண்டானாவில் தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் திரும்பும் இடத்தில் சாலையோரம் மின்மாற்றி உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்மாற்றியை மாற்று இடத்தில் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-செல்லத்துரை, பாளையங்கோட்டை.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து தங்கம்மன் கோவில் தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக, திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 9-வது வார்டு முகமது சாலிகாபுரம் 2-வது தெரு கடைசி பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. எனவே பழைய மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ஜெய்லானி, கோவில்பட்டி.

இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

உடன்குடி அருகே செட்டியாபத்து பஞ்சாயத்து கொட்டங்காடு அம்மன் கோவில் தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அங்குள்ள சுவிட்சு பெட்டியில் மின் இணைப்புகளும் வெளியே தொங்கியவாறு உள்ளது. அப்பகுதியில் உள்ள அடிபம்பும் பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான குடிநீர் தொட்டி, சுவிட்சு பெட்டியை புதுப்பிக்கவும், அடிபம்பை பழுது நீக்கவும் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

-கோகுல் சிவா, கொட்டங்காடு.

ஆபத்தான மின்கம்பம்

நாசரேத் அருகே மேல வெள்ளமடம் முத்துநகர் இசக்கி அம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-அம்மமுத்து, மேல வெள்ளமடம்.


Next Story