பள்ளி மாணவர்களுக்கான நடனம், யோகா போட்டி
தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுக்கான நடனம், யோகா போட்டி நடந்தது.
தூத்துக்குடி புனித அந்தோணி மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களுக்கிடையேயான நடனம், யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. மாலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
அவர் பேசுகையில், "இந்த போட்டியில் பங்கேற்றவர்களில் பலர் வெற்றி பெற்று இருப்பீர்கள். சிலருக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் போட்டியில் பங்கேற்பதே வெற்றியாக கருத வேண்டும். இதுபோன்ற போட்டிகள் மூலம் கிடைக்கும் ஊக்கம் உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும். மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் வெற்றியாளராக இருக்க வேண்டும். நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தினால் நிச்சயமாக உங்கள் லட்சியத்தை அடைய முடியும்" என்றார்.
விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, புனித அந்தோணி பள்ளி தாளாளர் அனிதா ஜோசப் மற்றும் ஆசிரியர்கள் பாலமுருகன், ஷேக் மைதீன், காந்தி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.