கவுந்தப்பாடி அருகே வாய்க்காலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் பரிதாபம்


கவுந்தப்பாடி அருகே வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலியாகினர். அவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலியாகினர். அவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மாணவர்கள்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி நேருநகரை சேர்ந்தவர் பீட்டர் கனகராஜ். இவருடைய மகன் காட்சன் பிரின்ஸ் (வயது 15). கவுந்தப்பாடி சத்தியமங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன். இவருடைய மகன் ஹரிகிருஷ்ணன் (15). 2 பேரும் கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக அவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்தனர். இதனிடையே நேற்று 2 பேரும் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு சென்றனர்.

குளித்தனர்

பின்னர் மாலையில் சிறப்பு வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் கவுந்தப்பாடியை அடுத்த ஆயிக்கவுண்டனூரில் ஒரு கோவில் அருகே கீழ்பவானி கசிவுநீர் பாசன வாய்க்காலில் நண்பர்கள் சிலருடன் குளித்தனர்.

அப்போது காட்சன் பிரின்ஸ் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தபடி மூழ்கினர். இதை கண்டதும் அங்கிருந்த அவர்களுடைய நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர்.

சாவு

மாணவர்களின் சத்தம் கேட்டதும், அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நீரில் மூழ்கிய 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து பலியான மாணவர்கள் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மாணவர்களின் உடல்களையும் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

தொடர்ந்து இது தொடர்பாக கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கால்வாயில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story