திருவண்ணாமலை அருகே விபத்தில் 8 பேர் பலி ; டிரைவர் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பில் அண்ணியும் சாவு


திருவண்ணாமலை அருகே விபத்தில் 8 பேர் பலி ; டிரைவர் இறந்த அதிர்ச்சியில் மாரடைப்பில் அண்ணியும் சாவு
x
தினத்தந்தி 24 Oct 2023 7:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:00 PM GMT)

திருவண்ணாமலை அருகே விபத்தில் 8 பேர் பலியாகினர். டிரைவர் இறந்த தகவல் அறிந்ததும் அவரது அண்ணி அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

திருவண்ணாமலை அருகே விபத்தில் 8 பேர் பலியாகினர். டிரைவர் இறந்த தகவல் அறிந்ததும் அவரது அண்ணி அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

விபத்தில் 8 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கருமாங்குளம் பகுதியில் காரும், அரசு பஸ்சும் நேற்று முன்தினம் இரவு மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மாரம்பட்டியை சேர்ந்த டிரைவர் காமராஜ் (வயது27), கெலமங்கலம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த புனித்குமார் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 8 பேர் பலியாகினர். இதுகுறித்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ச்சியில் அண்ணி சாவு

இறந்த காமராஜின் அண்ணன் கிருஷ்ணனின் மனைவி செல்வி (37) இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். டிரைவர் காமராஜ் பலியான அதிர்ச்சியில் அவரது அண்ணியும் மாரடைப்பில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதே போல விபத்தில் பலியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 பேரும் ஓசூர் அருகே அக்கொண்டப்பள்ளியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். ஆயுத பூஜை விடுமுறை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர்.

திருவண்ணாமலை அருகே நடந்த விபத்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வட மாநில ஊழியர்கள் 5 பேர் உள்பட 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story