முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை இழிவுபடுத்தி பேசுவதா? கவர்னருக்கு, வைகோ கண்டனம்


முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை இழிவுபடுத்தி பேசுவதா? கவர்னருக்கு, வைகோ கண்டனம்
x

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை இழிவுபடுத்தி பேசுவதா? கவர்னருக்கு, வைகோ கண்டனம்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஊட்டியில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை அரியானா மாநிலம் ஈர்த்து வருகிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. முதலீடுகளை ஈர்க்க திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்." என்று பேசியுள்ளார்.

சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுவிட்டு திரும்பி இருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த பயணத்தில் ஐ.பி. நிறுவனம், டைசல் நிறுவனம், ஹோம்ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.3 ஆயிரத்து 233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதல்-அமைச்சர் சொல்லி இருக்கிறார்.

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை இழிவுபடுத்தி கவர்னர் ஆலகால விஷத்தை கக்கி இருக்கிறார். கவர்னரின் பேச்சும், செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் கவர்னரை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story