எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி: சபாநாயகர் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்- ஓபிஎஸ் பேட்டி


எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி: சபாநாயகர் உத்தரவுக்கு கட்டுப்படுவோம்- ஓபிஎஸ் பேட்டி
x

இப்போது வருபவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி சட்டவிதிகளை மாற்ற நினைப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை,

சென்னை செல்வதற்காக, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஏற்பட்டிருக்க கூடிய பின்னடைவுகள், அரசு, மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் எழுப்ப இருக்கிறோம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தில், சபாநாயகரின் முடிவு தான் இறுதியானது. அதற்கு கட்டுப்படுவோம்.

தொண்டர்களின் அடிப்படை உரிமையை காக்கவே எம்.ஜி.ஆர். சட்ட விதிகளை உருவாக்கி அதை பாதுகாத்தார். ஆனால், இப்போது வருபவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி சட்டவிதிகளை மாற்ற நினைக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் எதிர்எதிராக இருந்தாலும், கூட்டத்தொடரில் அருகருகே இருக்கைகள் ஒதுக்கி இருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எதிரெதிரே இருக்கிறோம் என நீங்கள் தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

1½ கோடி தொண்டர்கள் இந்த இயக்கத்தை தாங்கி பிடித்து 50 ஆண்டு காலம் மாபெரும் இயக்கமாக வைத்திருக்கிறோம். இந்த கட்சியில், சாதாரண தொண்டன் கூட கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடுவதற்கு உரிமை இருக்கிறது என்றார்.


Next Story