ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி டிஜிட்டல் உயிர்வாழ் சான்று


ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி டிஜிட்டல் உயிர்வாழ் சான்று
x

ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி டிஜிட்டல் உயிர்வாழ் சான்று வழங்கப்படுகிறது.

திருச்சி

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, வருடாந்திர உயிர் வாழ் சான்றிதழ் சமர்பிப்பதில் இருந்து மாநில அரசு விலக்கு அளித்து இருந்தது. இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 15 ஆயிரத்து 761 மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்குள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் "இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி", ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை இந்த சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70-ஐ தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். எனவே மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ச.சுவாதி மதுரிமா தெரிவித்துள்ளார்.


Next Story