தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

நோய் தொற்று அபாயம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமம் தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சிலர் கழிவறையில் இருந்து வெளியேறும் இயற்கை உபாதை கழிவையும் இதில் வெளியேற்றி விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெரியசாமி, சிறுகுடல்.

வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஆங்காங்கே சாலைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சில இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், பெரம்பலூர்.

திறந்து கிடக்கும் பொது கிணறு

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் மாரியம்மன் கோவில் தெருவில் பொதுக்கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பொது கிணறு பராமரிப்பு இன்றி திறந்து கிடப்பதினால் இந்த கிணற்றை குழந்தைகள் எட்டிப் பார்க்கும்போது தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சமூக ஆர்வலர்கள், எளம்பலூர்.


Next Story